திருச்செந்தூரில் தைப்பூச விழா : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2021 01:01
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காவடி எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன்செலுத்தினர்.
கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3:30க்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00க்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. காலை 8:45க்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி அலைவாய் உகந்தபெருமான் சப்பரத்தில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினார். தமிழகம் முழுதும் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், பொதுமக்கள் அதிகாலையிலேயே கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தியும், காவடி, பால் குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.கொரோனா முன்னெச்சரிக்கையாக கோயில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் தங்க அனுமதிக்காத நிலையில் தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்து பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். துாத்துக்குடி எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர்(பொறுப்பு) கல்யாணி செய்திருந்தனர்.