பதிவு செய்த நாள்
29
ஜன
2021
05:01
காஞ்சிபுரம் : காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில், மூன்று நாட்கள் தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து திரு விழாக்களும் ரத்து செய்யப்பட்டது.சுவாமி வீதியுலா புறப்பாடின்றி, கோவில் வளாகத்திற்குள்ளேயே நடந்து வருகிறது. இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவில் தெப்பல் ற்சவம், நேற்று துவங்கியது.உற்சவத்திற்கு முன், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன், சன்னிதி தெருவில் உள்ள, திருவடி கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு, திருவடி கோவிலுக்கு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.நேற்று மாலை, 6:30 மணிக்கு, பெருமாள், கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு, கோபுரம் வாசல் வரை சென்றார்.பின், பெருந்தேவி தாயாருடன், அங்கிருந்து புறப்பட்டு, அனந்தசரஸ் குளத்து தெப்பலில் எழுந்தருளினார். நாளை மறுநாள், தெப்ப உற்சவம் நிறைவு பெறுகிறது.