பதிவு செய்த நாள்
29
ஜன
2021
05:01
மேல்மருவத்துார் : ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதியை, பங்காரு அடிகளார் நேற்று ஏற்றி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மன்னுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, அடிகளார் வீட்டிலிருந்து, குரு ஜோதியை, ஐந்து பெண்கள் ஊர்வலமாக சுமந்து, தைப்பூச ஜோதி மேடைக்கு வந்தனர். மாலை, 6:25 மணிக்கு, பங்காரு அடிகளார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் ஆகியோர், தைப்பூச ஜோதியை ஏற்றி வைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜேஷ்வரன், முருகேசன், பெரம்பலுார் மாவட்ட நீதிபதி கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன.தமிழகம் மட்டும் இன்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். எஸ்.பி., கண்ணன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும், தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்னதாக, கார்த்திகை மாதத்தில், பக்தர்கள் சக்திமாலை அணிந்து, சுயம்பு அன்னைக்கு செய்யும் அபிஷேகம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.