பதிவு செய்த நாள்
29
ஜன
2021
05:01
பல்லடம்: பல்லடம் அடுத்த ஆறாக்குளம் கிராமத்தில், இயற்கைக்கு நன்றி தெரிவித்து கிராம மக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மூன்றாவது ஆண்டாக தைப்பூச விழா இங்கு கொண்டாடுகிறோம். ஏழு நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் தக்காளி, தயிர், எலுமிச்சை, புளி உள்ளிட்ட பல்வேறு சாதங்களை தனித்தனியாக வீட்டிலேயே தயார் செய்வோம். தினசரி மாலை இங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் அனைவரும் ஒன்றுகூடி கொண்டுவந்த உணவுகளை அம்மனுக்கு படையல் செய்து தீபம் வைத்து வழிபடுவோம். இதையடுத்து, கண்ணாமூச்சி, நொண்டி உள்ளிட்ட பழமையான விளையாட்டுகளை சிறுவர் சிறுமிகள் விளையாடுவர்.
நிலவுக்கும், விவசாய தொழிலுக்கும் நன்றி தெரிவித்து பெண்கள் கும்மியாட்டம் ஆடுவர். இரவு அனைவரும் உணவை பகிர்ந்து உண்டு அம்மனை வழிபாடு செய்து வீடு திரும்பவோம். கடந்த நூறு ஆண்டுக்கு மேலாக எங்கள் முன்னோர் இந்த வழிபாட்டு முறையை செய்து வந்துள்ளனர். இடையில் இந்த வழிபாடு விடுபட்ட சூழலில், ஊர் பெரியோர்களின் அறிவுறுத்தலின் பேரில், மூன்றாவது ஆண்டாக இதை மீண்டும் கடைபிடித்து வருகிறோம். விவசாய தொழில் மேம்படவும், உணவு அளித்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.