பதிவு செய்த நாள்
29
ஜன
2021
05:01
வீரபாண்டி: கந்தசாமி கோவிலில், திரளான பக்தர்கள் வெள்ளத்தில், அரோகரா கோஷம் முழங்க, தேரோட்டம் களைகட்டியது.
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச விழா, கடந்த, 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு, மூலவர் கந்தசாமிக்கு, சிறப்பு அபி ?ஷகம் செய்து, 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமியை தேரில் எழுந்தருளச்செய்தனர். மாலை, 3:30 மணிக்கு, கோவில் முன் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர்களில், முதலில் விநாயகர் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில், அரோகரா கோஷம் முழங்க, கந்தசாமியின் தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை வலம் வந்தனர். அப்போது, உப்பு, மிளகு, தங்கள் வயல் தோட்டங்களில் விளைந்த நெற்கதிர், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்களை, தேர் மீது, பக்தர்கள் தூவி தங்கள் காணிக்கைகளை செலுத்தினர். அத்துடன், தேங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தார் ஆகியவற்றை, தேரில் கட்டி, வேண்டுதலை நிறைவேற்றினர். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்ததால், தேரோட்டம் களைகட்டியது. இவர்களில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், பாதயாத்திரையாக, காவடியை சுமந்து வந்தனர். வழி நெடுகிலும், பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல், அன்னதான பந்தல்கள் அமைக்கப்பபட்டிருந்தன. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து, காளிப்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று, முத்துப்பல்லக்கு, நாளை, சத்தாபரண மகாமேரு ஊர்வலம், ஜன., 31ல் வசந்த விழாவுடன், தைப்பூச திருவிழா நிறைவடையும்.