பதிவு செய்த நாள்
29
ஜன
2021
05:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான மலை அடிவார பழநி ஆண்டவர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று மூலவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.நேற்று காலை, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூஜை, அபிஷேகப் பொருட்களை சிவாச்சார்யார்கள், பழநி ஆண்டவர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு எழுந்தருளியுள்ள மூலவருக்கு பல்வகை திரவிய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துகுமார சுவாமி, தெய்வானை தனித்தனியாக கோயிலுக்குள் புறப்பாடாகினர்.பக்தர்கள் பால் குடங்கள், இளநீர், பன்னீர் காவடி எடுத்து வந்தனர். பலர் அலகு குத்தி வந்தனர். மதுரை பக்தர்கள் பறவை காவடியில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வள்ளி, தேவ சேனா சமேத கல்யாண முருகன் முன்பு யாகசாலை பூஜைகள் முடிந்து உற்ஸவர்கள், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலையில் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடானார். ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவர், சக்திவேலுக்கு பாலாபிஷேகம், பூஜைகள் முடிந்து மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது.அலங்காநல்லுார் கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரம் ஓம் சிவ சுப்ரமணியர் கோயிலில் பக்தர்கள் அலகுத்தி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். சுவாமிக்கு 26 வகையான அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி ஹரிபகவான் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.