பதிவு செய்த நாள்
29
ஜன
2021
06:01
உத்திரமேரூர் : கோவில் புனரமைப்பின்போது, தங்கப்புதையல் கிடைத்த, உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோவில் தெருவில், கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் கால ஜேஷ்டாதேவி சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
உத்திரமேரூரில், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவிலில், கடந்த டிசம்பர் மாதம், புனரமைப்பு பணி நடந்தபோது, தங்க புதையல் கிடைத்தது. இந்நிலையில், கோவில் அமைந்துள்ள குழம்பேஸ்வரர் கோவில் தெருவில், பேரூராட்சி சார்பில், வடிகால்வாய் அமைக்க, நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, கற்சிலை ஒன்று இருப்பதை அவர்கள் கண்டெடுத்தனர். அந்த சிலையை சுத்தப்படுத்திய பொதுமக்கள், சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, வழிபாடு நடத்தி வருகின்றனர். இதையறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், அச்சிலையை ஆய்வு செய்தனர். இது குறித்து, ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த, 4 அடி உயரம், 2 அடி அகலமும் உடைய, மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையாகும்.பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட எல்லா கோவில்களிலும் ஜேஷ்டாதேவிக்கு என, தனி சன்னிதி உள்ளது. பிற்கால சோழர்களின் ஆட்சியில், மூத்ததேவி வழிபாடு முக்கியத்துவம் இழந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.