அனுப்பர்பாளையம்: திருப்பூர், போயம்பாளையம் சக்தி நகரில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 27 ம் ஆண்டு தைப்பூச விழா கடந்த 9 நாட்கள் முன்பு தொடங்கியது.
விழாவையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களது வீடுகளில் இருந்து உணவு வகைகளை வீதிகளில் கொண்டுவந்து, கும்மியடித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் நிலா சோறு உண்டனர். இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச விழா நேற்று இரவு நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மாவிளக்கு, தானியங்கள், இனிப்பு மற்றும் உணவு வகைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த முருகன் சிலை முன்பு வைத்து கும்மியடித்து, பாட்டுப்பாடி வழிபட்டனர். தொடர்ந்து, தொழில் வளம் பெருகவும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கு உள்ள வீதியில் ஒரேநேரத்தில் அனைவரும் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டனர். தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.