திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அக்.,26ம் தேதி முதல் தினசரி 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இலவச தரிசனத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளது. முன்பதிவு இல்லாமல் வரும் பக்தர்கள், தரிசனம் செய்யாமல் திரும்ப கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவிஐபி பிரேக் தரிசனம், சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசனம் என சேர்த்து, இனி 50 ஆயிரம் பேர் தினமும் சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.