பதிவு செய்த நாள்
30
ஜன
2021
05:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மூல கருவறை லிங்கத்தின் பீடத்திற்கு, கும்பாபிஷேகத்திற்கு பின், மூன்றாவது முறையாக மருந்து சாத்தப்பட்டது.
கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது, சுவாமி பீடத்தை, பூமியுடன் இணைத்து பிடிப்பதற்காக, அஷ்டபந்தன மருந்து சாத்தப்படுவது வழக்கம். மருந்து சாத்தும்போது, சுவாமியின் அடிப்பாகத்தில் தங்கம், வைரம் உள்ளிட்ட நவரத்தின நகைகளை, பக்தர்கள் கையால் வைப்பது வழக்கம். இவ்வாறு, 2017 பிப்., 6ல், நடந்த கும்பாபிஷேகத்தின் போது, அருணாசலேஸ்வரர் மூல கருவறை லிங்கத்திற்கு மருந்து சாத்தப்பட்டது. இவை, 12 ஆண்டுகளுக்கு பலமாக இருக்கும். ஆனால், மருந்து சாத்தப்பட்டு, சில மாதங்களிலேயே பீடம் ஆட்டம் கண்டதால், 2018ல் மீண்டும் மருந்து சாத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தற்போது பீடம் ஆடியதால், மூன்றாவது முறையாக, 28ம் தேதி இரவு, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், சிவாச்சாரியார்கள் முன்னிலையில், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது.