பதிவு செய்த நாள்
30
ஜன
2021
05:01
ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார், வைணவ மகான் ராமானுஜர். பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிக பணிகளிலும், சமய சீர்திருத்த பணிகளையும் மேற்கொண்டார். வைணவத்தை தழைத்தோங்கச் செய்து, விசிஷ்டாத்வைதம் என்ற உயரிய கோட்பாட்டையும் வகுத்து தந்தார்.
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக, ராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது சீடர்களால் ராமானுஜர் உருவம் தாங்கிய செப்பு சிலை உருவாக்கப்பட்டது.இந்த விக்ரகத்தை கண்டு மகிழ்ந்து, தழுவி தன் சக்தியை அதனுள், ராமானுஜர் செலுத்தினார். இந்த சிலை, தானுகந்த திருமேனி என அழைக்கப்படுகிறது. தானுகந்த திருமேனி சிலை, தை மாதம், பூச நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது முதல் இன்று வரை, ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ராமானுஜரின் தானுகந்த திருமேனி சிலை சிறப்பாக பராமரித்து, பக்தியோடு வழிபாடு செய்யப்படுகிறது.
மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில், ராமானுஜரின் தானுகந்த திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யும் போதும், திருவாராதனம் செய்யும் போதும், வெந்நீரை உபயோகிக்கின்றனர். அந்த காலங்களில், இரவு நேரங்களில் ராமானுஜரின் திருமேனிக்கு குளிராமல் இருப்பதற்கு, சால்வைகள், ரஜாய் எனப்படும் போர்வைகள் சாற்றப்படுகிறது. இதேப்போல் கோடை காலத்தில், மிகவும் குளிர்ந்த, துாய்மையான நீரில் திருமஞ்சனம் செய்கின்றனர். அதிக வெப்பம் உள்ள காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் சூட்டை தணிக்க, அவருடைய திருமேனியின் பின்புறம் சந்தனம் பூசப்படுகிறது. இந்த மரபு, தொடர்ந்து பல நுாறு ஆண்டுகளாக தொடர்கிறது.