பதிவு செய்த நாள்
30
ஜன
2021
05:01
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில், சமயபுரம் மாரியம்மனுக்கு, சீர்வரிசை வழங்கப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலாக, சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் மாரியம்மனுக்கு, ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில், ரெங்கநாதர் கோவில் சார்பில், பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருநாளான நேற்று முன்தினம் காலை, சமயபுரத்தில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட மாரியம்மன், ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் அருகே, கொள்ளிடக்கரையில் எழுந்தருளினார்.இரவு, 10:00 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து, அறங்காவலர் குழுவினர் மங்கலப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை, கொள்ளிடம் ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பட்டு வஸ்திரம், மாலைகள் போன்றவை மாரியம்மனுக்கு அணிவிக்கப் பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.