பதிவு செய்த நாள்
30
ஜன
2021
11:01
கோவை:கோவை அருகே, கவுண்டம்பாளையத்தில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை சென்ற குழுவினர் அணிந்து இருந்த பனியனில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி படம் அச்சிடப்பட்டு இருந்தது. இது, சமூக வலைதலங்களில் வைரல் ஆனது.கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரம் காட்டி வரும் தி.மு.க., தேர்தல் சமயங்களில் பக்தி நாடகமாடி வருகிறது.
சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கையில் வேலுடன், போஸ் கொடுத்தார். அவரது கட்சியினரும், ஆங்காங்கே கோவில்களில் நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளில், தங்களை அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் நகரில், பழநி பாதயாத்திரை குழுவின் காவடி பூஜை நடந்தது.இவ்விழாவில், பங்கேற்று பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழங்கிய பனியனில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கோவை மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளது. காவடி விழாவில் பங்கேற்ற, அப்பகுதியை சேர்ந்த கோவை மாநகர, மேற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி அமைப்பாளர் மாலதி கூறுகையில்,இந்த பனியன், 8வது வட்ட தி.மு.க., செயலாளர் வெற்றிவேல் சார்பில் தயார் செய்து, மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில தலைமையில் உள்ளவர்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் பெருவாரியான மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கிறாம், என்றார்.