பதிவு செய்த நாள்
31
ஜன
2021
10:01
சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், வடநெற்குணம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - மரக்காணம் சாலையில், ஆலங்குப்பத்திற்கு அருகே உள்ளது வடநெற்குணம். இங்குள்ள மாசியப்பன் கோவிலில், பழமையான புடைப்பு சிற்பமாக அய்யனார் உள்ளதை, அன்னம்பாக்கம் தனபால் கண்டுபிடித்து, உ.வே.சா., நுாலக காப்பாட்சியர் கோ.உத்திராடம் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் பூபாலன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஆய்வு செய்தனர்.
குண்டலம்: இதுகுறித்து, கோ.உத்திராடம் கூறியதாவது:அய்யனார் புடைப்பு சிற்பம், 4 அடி உயரமுள்ள பலகை கல்லில், வலதுகால் கோலத்தில் பீடத்தின் மேல் குத்திட்டும், இடது கால் மடித்தும் அமர்ந்த நிலையிலும், சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அய்யனாரின் தலையில் சடாமுடி தரித்து, தோள்களில் படுமளவுக்கு நீண்ட காதுகளில் குண்டலம் அணிந்து, வலது கையில் செண்டைப் பிடித்தும், இடது கையை தொடை மீது வைத்தும் அமர்ந்து உள்ளார்.
கழுத்தில் அணிகலன், மார்பில் முப்புரிநுால், மேல் கையில் தோள்வளை, மணிக்கட்டில் காப்பு, இடையில் இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அய்யனாருக்கு அழகு செய்கின்றன. புடைப்பு சிற்பம்அய்யனாரின் தலையை ஒட்டி சாமரமும், குடையும் காட்டப்பட்டு உள்ளது. இடதுபுரம் அழகிய குதிரை, பீடத்தின் அருகில் நாய்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தோற்றத்தை வைத்து, இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் காலத்தில் வடிக்கப்பட்ட, புடைப்பு சிற்பமாக இருக்க வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்தை சேர்ந்த அய்யனார் சிற்பங்கள், விழுப்புரத்தின் ஆலகிராமம், கிளியனுார், நெற்குணம், செண்டியம்பாக்கம், தென்பேர், பிடாகம், கொண்டங்கி, ஒரு கோடி, சித்தேரிக்கரை ஆகிய ஊர்களில் உள்ளன. அதேபோல, சோழர் காலத்தை சேர்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்களும் இவ்வூரில் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.