பதிவு செய்த நாள்
31
ஜன
2021
10:01
காஞ்சிபுரம்:அயோத்தி ராமர் பூமியில், கோவில் கட்டுமான பணிக்கு, பொதுமக்கள் நிதி வழங்க, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், நாளை காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, உண்டியல் வைக்கப்பட்டு, நிதி சேகரிக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராம ஜன்ம பூமி குறித்த வரலாற்று, தொல்லியல் உண்மைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றது.விழிப்புணர்வு பிரசாரம்இதையடுத்து, கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு, பிப்ரவரியில் அமைக்கப்பட்டது.
ராமர் பூமியில் கோவில் கட்டுமான பணி குறித்து, ஜன., 15 முதல், பிப்., 27 வரை, மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.இதில், கோவில் கட்டும் பணியில் பொதுமக்கள் பங்கேற்பது குறித்து விளக்கி, நன்கொடைகள் பெறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், நிதி சேகரிக்க உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, காஞ்சிபுரம் சங்கர மடம் மேலாளர் சுந்தரேச அய்யர், நிருபர்களிடம், கூறியதாவது: ராமர் கோவில் கட்டுமான பணிக்கு காணிக்கை வழங்குவது குறித்து, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம், ஆட்டோ மூலமாக, விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்பட உள்ளது.கோவில் கட்டுமான பணிக்கு, பக்தர்கள் நிதி வழங்கும் வகையில், சங்கர மடத்தில், நாளை காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பெரிய உண்டியல் வைக்கப்படும். இதில், எவ்வளவு தொகை வேண்டுமானாலும், பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தலாம். ராமர் கோவில் கட்டுமான பணிக்காக, காலை, 9:15 மணி முதல், பகல், 12:45 மணி வரை, விசேஷ யாகம் நடத்தப்பட உள்ளது.சென்னையைச் சேர்ந்த, 12 வேத விற்பன்னர்கள் பங்கேற்கும், ராம மூலமந்திர யாகம் எனப்படும் ராமசடாக்ஹரி யாகம் நடத்தப்பட உள்ளது.
உடுப்பி பெஜாவர்: பொதுமக்கள் வழங்கிய நிதி, மாலை, 5:30 மணிக்கு, காஞ்சிபுரம் சங்கரமடம் மடாதிபதி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், சங்கரமடம் சார்பில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மூலமாக, ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்டின் பொருளாளர் கோவிந்த தேவ்கிரி சுவாமிகளிடம் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதியும், ராமர் கோவில் நிர்மானத்திற்கான தென்மாநில பிரதிநிதியுமான, விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமி பங்கேற்கிறார்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.தொடர்புக்கு: 98408 33575
சென்னையில் எங்கே?: ராமர் கோவிலுக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி, சென்னை நங்கநல்லுார், மூவரசம்பட்டு சாலையில் உள்ள, பெரிய பாளையத்து அம்மன் கோவிலில், இன்று காலை நடக்கிறது. காமாட்சி சுவாமிகள் தலைமையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பெஜாவர் மடத்தின் மடாதிபதியும், ராமர் கோவில் நிர்மானத்திற்கான தென்மாநில பிரதிநிதியுமான, விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமி பங்கேற்று சிறப்புரைஆற்றுகிறார்.