பதிவு செய்த நாள்
31
ஜன
2021
10:01
சென்னை: அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கான, நிதி சேகரிப்பு துவக்க விழா, சென்னை நங்கநல்லுார், பெரிய பாளையத்தம்மன் கோவிலில் இன்று நடக்கிறது.
அயோத்தி ராம ஜென்ம பூமி குறித்த வரலாற்று, தொல்லியல் உண்மைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு, பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. அதனுடன், வி.எச்.பி., என்ற, விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து செயல்படுகிறது.இந்த கோவில் ஐந்து கோபுரங்களுடன், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.
ஐ.ஐ.டி.,க்கள், லார்சன் அண்டு டியூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீஸ், கட்டட வடிவமைப்பாளர்ஷோம்புரா ஜி மற்றும் பலதுறவிகள் வாயிலாக ஆலயம் அமைக்கப்படுகிறது. வி.எச்.பி.,யுடன், நாடு முழுதும் உள்ள துறவியர்கள், மடாதிபதிகள், வைணவ ஆச்சாரியார்கள், பல்வேறு ஆன்மிக அமைப்பினர், லட்சக்கணக்கான தன்னார்வலர்கள், இப்பணியில் பங்கேற்றுஉள்ளனர். ராம ஜென்ம பூமியில் கோவில் கட்டுமான பணி குறித்து, ஜன., 15 முதல், பிப்., 27 வரை மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், கோவில் கட்டும் பணியில் பொதுமக்கள் பங்கேற்பது குறித்து விளக்கி, நன்கொடைகள் பெறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ராமர் கோவிலுக்கான நிதி சேகரிப்பு துவக்க விழா நங்கநல்லுார், மூவரசம்பட்டு சாலையில் உள்ள பெரிய பாளையத்து அம்மன் கோவிலில், இன்று காலை நடக்கிறது. காமாட்சி சுவாமிகள் தலைமையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பெஜாவர் மடத்தின் மடாதிபதியும், ராமர் கோவில் நிர்மானத்திற்கான தென்மாநில பிரதிநிதியுமான, விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.