பதிவு செய்த நாள்
01
பிப்
2021
10:02
பழநி: பழநி தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்குதலுடன் நிறைவடைந்தது. நேற்று நடந்த தெப்போற்ஸவத்தை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில், ஜன.,22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சமேத திருவுலா வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, தங்கக்குதிரை, பெரிய தங்க மயில் வாகனங்களில் நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம் ஜன.,27ல் நடந்தது. தைப்பூசத்தன்று (ஜன.,28) தேரோட்டம் விமரிசையாக நடந்தது. தைப்பூச விழாவின் 10ம் நாளான நேற்று இரவு பெரியநாயகிம்மன் கோயில் அருகே தெப்பக்குள மைய மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். யாகபூஜை அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
வாணவேடிக்கை மத்தியில் வண்ண மின்விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் குளத்தை வலம் வந்தார். செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்தனர். சித்தனாதன் அன்ட் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 11:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்கத்துடன் தைப்பூசவிழா நிறைவு பெற்றது.