பதிவு செய்த நாள்
01
பிப்
2021
10:02
திருப்பதி: திருமலையில், லட்டு கவர் விற்பனை செய்யும் நடைமுறைக்கு, தேவஸ்தான நிர்வாகம், சுமுக தீர்வை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி, திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்ல, தேவஸ்தான நிர்வாகம், பிளாஸ்டிக் கவர்களை, இரண்டு ரூபாய்க்கு வழங்கி வந்தது. அதன்பின், கவரின் விலை, 3 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க, திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்தது. என்றாலும், லட்டு கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அட்டை பெட்டியில் லட்டை எடுத்துச் செல்ல, முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதை எடுத்துச் செல்லவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், லட்டு பிரசாதத்தில் உள்ள நெய், அட்டை பெட்டிகளால் உறிஞ்சப்பட்டது. அதனால், லட்டின் தரம் பாதிக்கப்பட்டது. எனவே, தேவஸ்தான நிர்வாகம், அதை தடை செய்தது. தற்போது, லட்டு கவருக்கு மாற்றாக சணல் பைகள், காகித பைகள், துணி பைகள் என, பைகளை, பல்வேறு விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த பைகளின் உட்பகுதியில் நெய் உறிஞ்சப்படுவதை தடுக்க தேவஸ்தானம், ஆயில் காகிதம் ஏற்படுத்தி உள்ளது.