பதிவு செய்த நாள்
01
பிப்
2021
01:02
பொள்ளாச்சி; அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திருப்பணிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நேற்று நடந்தது.ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்திர அறக்கட்டளை சார்பில், ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி சத்திரம் வீதியிலுள்ள, ஸ்ரீ சீத்தாராமர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று துவங்கியது. டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழக, கேரளா மாநில அமைப்பாளர் நாகராஜன் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, 500 ஆண்டு கால போராட்டத்துக்கு பின் அனுமதி கிடைத்துள்ளது.
கோவில் கட்ட நிதி வழங்குவது சமர்ப்பணம் செய்வதாகும். தமிழகம் ஆன்மிக பூமியாக மாற வேண்டும், என்றார்.சின்மயா மிஷன் வேதானந்த சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகள், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் கோபால் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, கோவில் கட்டுவதற்கான நிதியை பலரும் முன்வந்து கொடுத்தனர்.* கோவில்பாளையத்தில், அறக்கட்டளை கூட்டம் நடந்தது. கோவில்பாளையம் பகுதி தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் தனபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில பொருளாளர் லட்சுமண நாராயணன், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பா.ஜ., மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஹிந்து மக்களின் உணர்வுப்பூர்வமான இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்; ராமர் கோவில் கட்டப்படும் என பா.ஜ., தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து திருப்பணி முன்னெடுக்கப்பட்டது.
நமது கலாசாரத்தின் அடையாளமாக அயோத்தி ராமர் கோவில் இருக்க வேண்டும். அதில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இருக்க வேண்டும், என்றார்.* நெகமம் சின்னேரிபாளையத்தில், விழுதில்லா ஆலமரத்தடி பட்டாபிராமன் கோவில் வளாகத்தில், அயோத்தி ராமர் கோவில் கட்ட நிதி திரட்டும் கூட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அகில பாரத சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்தா ஆனந்தா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பொதுமக்களும், ஹிந்து பெரியோர்களும் பங்கேற்று அதிகளவில் நிதி அளித்தனர்.நன்கொடையாக குட்டீஸ் சேமிப்பு!கோவில்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், கிணத்துக்கடவை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி ரித்திகாஸ்ரீ, சேமித்து வைத்திருந்த, 5,000 ரூபாயை உண்டியலுடன் நன்கொடையாக வழங்கி அசத்தினார். கோவில்பாளையத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் விக்னேஷ், சேமிப்பில் இருந்து, 600 ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.பா.ஜ., மாநில துணை தலைவர் அண்ணாமலை, தனது பங்காக, 1,11,111 ரூபாய் நன்கொடையாக வழங்கினார். அப்போது, கடினமான காவல்துறையில் பணியாற்றிய சம்பளத்தில், சேமித்து வைத்த தொகையில் இருந்து இந்த நன்கொடையை வழங்குகிறேன், என்றார்.