தஞ்சாவூர்: திருவையாறு சத்குரு தியாகராஜர் 174வது ஆராதனை விழா மங்கல இசையுடன் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சித்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் நடைபெறும். இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள சங்கீத வித்வான்களும், இசை கலைஞர்களும் திருவையாறில் நடக்கும் ஆராதனை விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பது உண்டு. இந்த ஆண்டு இவ்விழா கொரோனா தொற்று காரணமாக, இன்று மற்றும் 2ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இன்று 174வது ஆராதனை விழா மங்கல இசையுடன் தொடங்கியது. மலர் அலங்காரத்தில் தியாகராஜர் அருள்பாலித்தார்.
நாளை 2ம் தேதி காலை 5.30 மணி முதல் எட்டு முப்பது மணி வரை ஊஞ்சவிருத்தி பஜனை நிகழ்ச்சியும், எட்டு முப்பது மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து இசைக்கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். காலை 10 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சியும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. பின்னர் தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவம் நடைபெற உள்ளது.