பதிவு செய்த நாள்
01
பிப்
2021
11:02
விருதுநகர் : விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் கி.பி. 16ம் நுாற்றாண்டை சேர்ந்த குதிரைவீரன், போர்வீரன் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மூளிப்பட்டியை சேர்ந்த ரவி கொடுத்த தகவல்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் , பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் தேவதாஸ் பாண்டி, நாகபாண்டி, பழனிமுருகன், மணி மூளிப்பட்டியில் ஆய்வு செய்தனர். அங்கு 16ம் நுாற்றாண்டை சேர்ந்த குதிரைவீரன், போர்வீரன் நடுகற்களை கண்டுபிடித்தனர்.முனீஸ்வரன் கூறியதாவது: நடுகல் வழிபாடு சங்க காலம் முதல் இருந்து வருகிறது. போர் வீரனின் வீரத்தை போற்றும் விதமாக நடுகற்களை நிறுவி தினமும் பூஜை செய்வர். மூளிப்பட்டியில் கண்டறியப்பட்டவை குதிரைப்படை, காலாட்படை வீரர்களின் நடுகற்கள். குதிரை வீரன் நடுகல் 3அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. ஒரு வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போல் புடைப்பு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் 2 அடி உயரம், 1 அடி அகலம் கொண்டது. வீரனின் இடுப்பில் குறுவாள், வலது கையில் உயர்த்திய வாள், நீண்ட காதுகள், சற்று சரிந்த கொண்டையுடனும் நின்றவாறு காட்சி தரும் வகையில் நடுகற்கள் செதுக்கப்பட்டுள்ளது, என்றார்.