பதிவு செய்த நாள்
02
பிப்
2021
05:02
தஞ்சாவூர், கும்பகோணம் மகாமக குளத்தில், மாசி மகத்தை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வரும் பிப்.27ல்., மாசி மகத்தை முன்னிட்டு, கலெக்டர் கோவிந்தராவ் மாகமக குளம், ஆதிகும்பேஸ்வரர் கோவில் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாசிமக திருவிழாவை சிறப்பாக நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்து துறை சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இந்தாண்டு மாசிமக விழா நடத்தப்படும். தற்போது மகாமக குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. மாசிமக திருவிழாவுக்கு வரக்கூடிய பக்தர்கள் குளத்தில் இறங்கி நீராடுவதற்கு ஏதுவாக பாதுகாப்பான முறையில், குளத்தில் உள்ள தண்ணீரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாசிமக விழாவின் போது, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். ஆய்வின் போது, நகராட்சி கமிஷனர் லட்சுமி, அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.