பதிவு செய்த நாள்
02
பிப்
2021
05:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான மகா தரிசனத்தில், வெள்ளிமயில் வாகனத்தில் உலா வந்த சுவாமியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின், மிக முக்கிய நிகழ்வான, மகா தரிசனம் நேற்றிரவு, 8:00 மணிக்கு வெகு விமரிசையாக நடந்தது. இதில் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய சுவாமி தம்பதி சமேதராக வெள்ளி மயில் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு,11:00 வரை சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி முன்னதாக காலையில், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகம், அதைத் தொடர்ந்து மலர் அபிஷேகம் நடந்தது. 5,000 கிலோ மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தைப்பூச திருவிழா, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் இன்று நிறைவுக்கு வருகிறது.