பதிவு செய்த நாள்
02
பிப்
2021
05:02
சோமனூர்:தேவராயபுரம் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோமனூர் அடுத்த தேவராயம் பாளையத்தில் உள்ள, ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில், பால் விநாயகர், பட்டத்தரசி அம்மன், கருப்பராயன் மற்றும் கன்னிமார் கோவில்கள் பழமையானவை.
இங்கு முதல் ஆண்டு விழாவை ஒட்டி, பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.நேற்று முன்தினம் மாலை, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. நேற்று காலை கலசங்கள் வைக்கப்பட்டு, ஹோமங்கள் நடந்தன. பூர்ணாகுதி நடந்து அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.பெருமாளுக்கு திருக்கல்யாணம் மற்றும் கண்ணூஞ்சல் ஆடும் வைபவங்கள் நடந்தன. பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் நடந்தது. நேற்று காலை முராரி சைதன்யதாஸ் பகவத்கீதை சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.