பதிவு செய்த நாள்
02
பிப்
2021
06:02
காஞ்சிபுரம்; அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, நிதி சேகரிப்புக்காக, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வைக்கப்பட்ட உண்டியலில், 6 கோடி ரூபாய் வசூலானது.
இத்தொகையை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்டின் பொருளாளர் கோவிந்த தேவ்கிரி சுவாமிகளிடம் வழங்கினார்.உத்தர பிரதேசம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதற்காக, பக்தர்களிடம் நன்கொடை பெற, காஞ்சி சங்கர மடத்தில், பெரிய உண்டியல் வைக்கப்பட்டது. இதில், பக்தர்கள், வணிகர் என பலர், 1 கோடி ரூபாய் செலுத்தினர்.தவிர, தஞ்சையைச் சேர்ந்த எம்.வி.ஜே.மோகன் என்ற தொழில் அதிபர், 5 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.மொத்தம், நன்கொடையாக வசூலான, 6 கோடி ரூபாயை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்டின் பொருளாளர் கோவிந்த தேவ்கிரி சுவாமிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உடுப்பி பெஜாவர் விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் பங்கேற்றார். விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:ராமர் கோவில் திருப்பணி துவக்கத்தை முன்னிட்டு, மடத்தின் சார்பில், முதல் மரியாதையாக, வெண்குடை, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது, பல சிரமங்கள் மத்தியில், பல இந்து அமைப்புகள், பக்தர்கள், இந்த காணிக்கையை அளித்துள்ளனர்.மனித உறவுகளுக்கிடையே ஏற்படுத்துவதுதான் சிறந்த பக்தி. ராமர் கோவில் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.