கிரிவலம் செல்லும் பக்தர்கள் நல்வாழ்வு பெறுவதுடன், மரணத்திற்குப் பின் கைலாயத்தில் வாழும் பேறு பெறுவர். வானுலகம் சென்றதும், அந்த உயிரை வரவேற்க வெள்ளிக்குடை பிடித்தபடி சந்திரன் வருவார். தொடர்ந்து சூரியன் கையில் விளக்கேந்தி வழிகாட்டுவார். தர்மதேவதை இன்முகத்துடன் வாழ்த்து சொல்வாள். தேவர்களின் தலைவனான இந்திரன் நறுமணம் வீசும் மலர்களை நடைபாதையில் துாவுவார். செல்வத்தின் அதிபதியான குபேரன் கை கூப்பி வணங்குவார். திசைக் காவலர்கள் மலர் மாரி பொழிவர். ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை ஆகியோர் ஆடிப்பாடி வரவேற்பர். புனித நதிகளான கங்கையும், யமுனையும் வெண்சாமரம் வீசுவர். அமுத கலசம் ஏந்திய படி மேகங்கள் வந்து தாகம் தணிக்கும். மகாலட்சுமி வாசனைத் திரவியங்களை அளிப்பாள். முடிவில் அந்த உயிர் கயிலைநாதரான சிவனின் திருவடியை அடையும்.