பதிவு செய்த நாள்
08
பிப்
2021
06:02
உடுமலை: ராகல்பாவி கிராமத்தில், தேர் கோலமிட்டு, மாவிளக்கு, பொங்கல் படைத்து, பாரம்பரிய முறைகளுடன், தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. உடுமலை அருகே ராகல்பாவி கிராமத்தில், பாரம்பரியமாக, தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
தொழில் ரீதியாக பல்வேறு பகுதிகளுக்கு, இடம் பெயர்ந்தவர்களும், இவ்விழாவையொட்டி, கிராமத்துக்கு வருகின்றனர்.பொது இடத்தில், 18 அடி உயரத்துக்கு, மண்ணில், வண்ண, கோலப்பொடிகளால், தேர் வரைந்து, முருகப்பெருமானை தேரில் வைத்து, மாவிளக்கு, பொங்கல், படையல் வைக்கின்றனர்.இரவு நேரத்தில், தேர்க்கோலம், அருகில், கிராமப்புற பாடல்களை பாடியபடி, கும்மியடித்து, விழாவை கொண்டாடுகின்றனர். சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்ற பிறகு, படையல் வைத்த பொருட்களை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குகின்றனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: குன்றிருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம் என்ற சொல்லுக்கு ஏற்ப, முன்னோர்கள் காலத்தில் இருந்து, பாதயாத்திரை செல்கிறோம். குறிப்பாக, தைப்பூசத்தையொட்டி, பழநி மலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கிறார்கள்.இவ்வாறு, யாத்திரை நிறைவு பெற்றதும், ராகல்பாவி கிராமத்தில், தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, இவ்விழா பாரம்பரியம் மாறாமல், நடந்து வருகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.