பதிவு செய்த நாள்
11
பிப்
2021
03:02
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுசிறப்பாக நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், குண்டம் திருவிழாவில் பங்கேற்பார்கள். இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால், திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று (11ம் தேதி) தை அமாவாசையன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், 24ம் தேதி நள்ளிரவு மயான பூஜை நடக்கிறது. 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல், 27ம் தேதி காலை, 6:30 மணிக்கு, திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.