திருக்கோவிலூர்: திருமலை நம்பி பஜனை சபை சார்பில், திருக்கோவிலூரில் இருந்து திருப்பதிக்கு 15ம் ஆண்டு பாதையாத்திரை பயணம் துவங்கியது.
திருமலை நம்பி பஜனை சபை சார்பில் திருக்கோவிலூரில் இருந்து திருமலை திருப்பதியில் நடைபெறும் ரதசப்தமி விழாவில் பங்கேற்கும் வகையிலான, நடைபயணம் நேற்று முன்தினம் துவங்கியது. சபையின் செயல் தலைவர் கண்ணன் தலைமையில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து நடைபயணத்தை துவக்கினர். மாடவீதி வழியாக வலம் வந்து 11 நாட்கள் நடை பயணம் மேற்கொள்ளும் இவர்கள் திருப்பதியில் நடைபெறும் ரதசப்தமி விழாவில் பங்கேற்க உள்ளனர். இவர்களை பக்தர்கள் பலரும் வணங்கி வழியனுப்பி வைத்தனர்.