பதிவு செய்த நாள்
11
பிப்
2021
04:02
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் உதயகருட சேவை இன்று நடந்தது.
இதையொட்டி, நேற்று பூர்வாங்க பூஜைகளும், மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், செண்பகவல்லி தாயார் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள், மகா திருமஞ்சனம் நடைபெற்றது.
இதையடுத்து உற்சவர் பெருமாள் இன்று தங்க கருட சேவை அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 5 மணியளவில் சோடச உபசார பூஜைகள் செய்து புறப்பாடு நடந்தது.
பின்னர் 6 மணியளவில் பிரகார புறப்பாடும், 6.20 மணிக்கு ராஜகோபுர வாசல் தீபாராதனையுடன் கோபுர தரிசன கருட சேவையில் எழுந்தருளினார். அப்போது நாலாயிர திவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, வேத பாராயணத்தை பாடினர். பின்னர் கோவிலின் 4 வீதிகளிலும் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து காலை 9.30 மணியளவில் கோவில் திருக்குளமான நந்திபுஷ்கர திருக்குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெகந்நாத பெருமாள் கைங்கர்ய சபாவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.