பதிவு செய்த நாள்
12
பிப்
2021
05:02
பெ.நா.பாளையம்: தை அமாவாசை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்பட்டி, வேணுகோபால சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், தை அமாவாசையையொட்டி, தேரோட்டம் நடக்கும். நடப்பாண்டு கொரோனாவால், பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், உற்சவமூர்த்திகளான வேணுகோபால சுவாமி, கிருஷ்ணன், ராதை மட்டுமின்றி, பரிவார தெய்வங்கள் பல்லக்கில் கோவிலை சுற்றிவலம் வரச்செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், பெத்தநாயக்கன்பாளையம், ஓலப்பாடி, சிவசுப்ரமணியர் கோவிலில், திருவீதி உலா நடந்தது. அதில், செல்வவிநாயகர், பால்வரதகிரி, சிவசுப்ரமணியர், அர்த்தநாரீஸ்வரர், இடும்பன், நவகிரகம், மயில்வாகனம், சக்திவேல், நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் திருவீதி உலாவில், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பொங்கல்: சங்ககிரி மலைக்கோட்டை முனியப்பன் கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. மதியம், உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு, பால், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.
முத்தங்கி: ஆத்தூர், கோட்டை சம்போடை வன மதுரகாளியம்மன், பெரியநாயகி, முத்தையா கோவில்களில், சிறப்பு அபி ?ஷகம், பூஜை, நேற்று நடந்தது. தொடர்ந்து, முத்தங்கி அலங்காரத்தில் மதுரகாளியம்மன், வெள்ளி கவசம், புஷ்பம் அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் அருள்பாலித்தனர். ஆத்தூர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் உள்பட மாவட்டம் முழுதும், பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.