பதிவு செய்த நாள்
12
பிப்
2021
05:02
பென்னாகரம்: நெருப்பூர் அருகே, முத்தத்திராயன் சுவாமிக்கு, தை மாத அமாவாசையையொட்டி, நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, நெருப்பூர் அருகே முத்தத்திராயன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலை, சந்தனமர கடத்தல் வீரப்பன் வழிபட்டு வந்ததால், வீரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நேற்று, தை மாத அமாவாசை என்பதால், நெருப்பூர், ஒட்டனூர், காட்டூர், நாகமரை, பன்னவாடியன்காடு, காமராஜ்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கொரோனா காரணமாக, கடந்த மார்கழியில், முத்தத்திராயன் கோவில் திருவிழாவுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால், நேற்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். இவர்கள், சுவாமி சிலையை தூக்கி, கோவிலை சுற்றி வலம் வந்தனர். அப்போது பக்தர்கள், கிரிவல பாதையில், சுவாமி சிலை தங்களை தாண்டி செல்லும் வகையில் படுத்தனர். இதனால், தீய சக்திகள் தங்களை விட்டு விலகும் என்று நம்புகின்றனர். மேலும், பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.