பதிவு செய்த நாள்
15
பிப்
2021
11:02
சென்னை : கந்தசாமி கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பாரிமுனை கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான, எருக்கஞ்சேரியில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இடம் உள்ளது. அது, போலி ஆவணங்கள் மூலம், சமூக விரோதிகளால் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து, நம் நாளிதழ், படத்துடன் விரிவான செய்தியை சமீபத்தில் வெளியிட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கம்:கந்தசாமி கோவிலுக்கு சொந்தமாக, பெரம்பூரில், 2.81 ஏக்கர் மற்றும் கொடுங்கையூர், எருக்கஞ்சேரியில், 1.23 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 54 பேர் முறையாக வாடகை செலுத்தவில்லை. அவர்களை காலி செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள், அந்த இடத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டி வந்தனர். இதையறிந்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தடை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள கட்டுமானத்தை இடித்து, அப்புறப்படுத்தி வழக்கு தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளது.பெரம்பூரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான, 2.81 ஏக்கர் நிலம், வருவாய் துறை பதிவேட்டில், ஓடை புறம்போக்கு என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடாக நடந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய, மாதவரம் சார் - பதிவாளர், துறை தலைவருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சொத்தில், கோவில் பெயர் இல்லாமல், ஓடை புறம்போக்கு என குறிப்பிடப்பட்டதை திருத்தம் செய்ய, மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.