குருகுலத்தில் ஒருநாள் மதிய நேரம். மதிய உணவை முடித்த குருநாதர் சற்று கண்ணயர்ந்தார். சீடன் ஒருவன் அவருக்கு விசிறி வீசிக் கொண்டிருந்தான். உண்ட மயக்கத்தால் சீடனுக்கும் லேசாக கண்ணைக் கட்டியதால் கவனம் தடுமாறினான். கைகள் தாழ்ந்து விசிறி குருநாதரின் மூக்கில் இடித்தது. பனை ஓலை விசிறி என்பதால் மூக்கில் கீறல் விழுந்தது. ‘‘முட்டாளே! துாக்கத்தால் என் மூக்கை காயப்படுத்தி விட்டாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்’’ எனக் கத்தினார். சீடனின் தலையில் குட்ட கையை ஓங்கினார். அவனது மொட்டைத்தலை கண்ணில் பட்டது. குட்டினால் வலிக்குமே என யோசித்தார். ‘‘பாவம்! உண்ட மயக்கத்தில் அவனுக்கும் இருக்கத் தானே செய்யும் என எண்ணி, ‘‘ சரி...சரி இனியாவது விழிப்புடன் இரு’’ என அறிவுறுத்தினார். கோபம் வருவது இயற்கை. வந்த வேகத்தில் அது மறைய வேண்டும். இதுவே நல்லவருக்கான அடையாளம்.