தஞ்சாவூர், கும்பகோணத்தில் மூன்று வைணவத்தலங்களில், மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள ஐந்து முக்கிய வைணவத்திருத்தலங்களுள் ஒன்றாக சக்கரபாணி சுவாமி கோவில் திகழ்கிறது. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் மாசிமகத்திருவிழாவையொட்டி இன்று காலை, கொடிமரம் அருகே சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாரோடு எழுந்தருளினர். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கருடன் உருவத்துடன் கூடிய கொடியேற்றம் நடந்தது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வருகிற 25-ம்தேதி வரை தொடர்ந்து நடைபெறும் விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 26-ம்தேதி அதிகாலை 4.30 மணிக்குள் மாசிமகத்தை முன்னிட்டு விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சக்கரபாணிசுவாமி தேரில் எழுந்தருளுகிறார். காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடக்கிறது. இதே போன்று ராஜகோபாலசுவாமி கோயிலில் கொடிமரம் அருகே ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசாமி கொடிமரத்தின் அருகே எழுந்தருள நேற்று காலை மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதே போல் ஆதிவராக பெருமாள் கோயில் கொடிமரம் அருகே பெருமாள் அம்புஜவல்லித்தாயாரோடு எழுந்தருளினார். தொடர்ந்து காலை கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.