திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோற்சவ பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. செங்கல்பட்டு மாவட்டத்தில், கோவில் நகரங்களில் ஒன்றாக, திருப்போரூர் விளங்குகிறது. இங்கு அறுபடைவீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி, சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக, செம்பாக்கத்திலிருந்து பிரத்யேகமாக தயாரித்த கொடி கயிறினை கொண்டு, கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.காலை, 5:00 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவைகளுக்கு, சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 5:30 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின், 7:00 மணிக்கு, உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.