பதிவு செய்த நாள்
20
பிப்
2021
10:02
தஞ்சாவூர்,- கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில், சுவாமி வீதிவுலா செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், வழக்கமான நடைமுறையான, 63 நாயன்மார்கள் வீதிவுலா செல்லாத நிலையில், பக்தர்கள் நாயன்மார்களை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், வரும் 26ம் தேதி மாசி மக தீர்த்தவாரி விழா நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 17-ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட ஆறு சிவாலயங்களிலும், 18ம் தேதி சக்கரபாணி கோவில் உள்ளிட்ட மூன்று பெருமாள்கோயில்களிலும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து நான்காம் நாள் விழாவில் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் இரட்டை வீதிவுலாவாக ஆதி கும்பேஸ்வரர் மற்றும் நாகேஸ்வரர் கோவில் வீதிகளுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் இன்று 63 நாயன்மார்களும் ஒற்றை வீதிவுலாக கும்பேஸ்வரர் கோவில் வீதிகளை மட்டும் வலம் வந்தது. நாகேஸ்வரர் கோவில் தெற்கு வீதி சாலைகளை, பாதள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு முழுமையாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், அங்கு வீதிவுலா செல்லவில்லை.
இதனால் அந்த பகுதியில் 63 நாயன்மார்களும் வீதிவுலா வரும் என காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அதே போல் 63 நாயன்மார்களும் சுமார் 20 படிச்சட்டங்களில் வீதிவுலாவாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு 5 பட்டறைகளில் 63 நாயன்மார்களையும் அமர்த்தி ஒற்றை வீதிவுலாவாக கொண்டு சென்றனர். இதுகுறித்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் அதிகாரிகள் கூறுகையில்; நாகேஸ்வரர் கோவில் தெற்கு வீதி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அங்கு 63 நாயன்மார்கள் வீதிவுலா செல்லவில்லை. அதே போல் தள்ளுவண்டி சைக்கிள் ரிக்ஷா கிடைக்காததால், பட்டறைகளில் வீதிவுலா நடத்தப்பட்டது என்றனர். இது குறித்து பக்தகர்கள் கூறியதாவது; 63 நாயன்மார்கள் வீதிவுலா என்பது மிகச்சிறப்பு வாய்ந்தது. 63 நாயன்மார்களும் இரட்டை வீதியாக நகரை வலம் வரும்போது, பொதுமக்களும், பக்தர்களும் கண்குளிர தரிசனம் செய்வார்கள். மாசி மக விழா தொடங்குவது முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்தும், சாலையை சீரமைக்கும் பணியில் மெத்தனமாக இருந்துள்ளனர். இதனால் தான் வீதிவுலா வரவில்லை. பாரம்பரியமாக நடைபெறும் இந்த வீதிவுலாவை இனி வருங்காலத்திலாவது தொடர்ந்து நடத்திட வேண்டும் என்றனர்.