வில்லியனுார் : திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரியில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கிராமத்தில் உள்ள கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் நாள் விழாவாக பாரிவேட்டை, 22ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. நேற்று தீர்த்தவாரி நடந்தது.விழாயொட்டி அதிகாலை 3:30 மணி முதலே சங்கராபரணி ஆற்றங்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தீதிகள் கொடுத்தனர்.
காலை 8:30 மணிக்கு மேல் உறுவையாறு, கிளிஞ்சிக் குப்பம், மங்கலம், ஆரியூர், கரிக்கலாம்பாக்கம், கீழ்குமாரமங்கலம், பங்கூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக் குழுவினர் செய்தனர்.