பதிவு செய்த நாள்
27
பிப்
2021
06:02
பெ.நா.பாளையம்:பெரிய தடாகம் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.கோவையை அடுத்த பெரிய தடாகத்தில் உள்ள அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டு, கோவில் சன்னதிகள் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்ட்டன.கடந்த 23ம் தேதி கணபதி ஹோமம், 24ம் தேதி யாகசாலை பூஜைகள், மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு நடந்தன. நேற்று காலை 5:00 மணிக்கு, மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, பஞ்சகவியம் வழிபாடு, மூலமந்திரம் நாடி சந்தானம் பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 8:15 மணிக்கு சிவாச்சாரியார்கள் தீர்த்தகுடங்களை ஏந்தியபடி கோவிலை வலம் வந்தனர். 8:35 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளின் கோபுரகலசங்களுக்கும், முருகனின் விமான கோபுர கலசத்துக்கும், புனித நீர் ஊற்றப்பட்டது. திரளான பக்தர்கள், அரோகரா... அரோகரா... என பக்தி முழக்கமிட்டனர். இதையடுத்து, முருகன், வள்ளி, தெய்வானை, அனுமன், அருணாசலேஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவையொட்டி, வனத்துறையினர் மற்றும் துடியலுார் போலீசார் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழா நிகழ்ச்சிகளை, தமிழ் செம்மல் புலவர் சங்கரலிங்கம், சண்முகஞானசம்பந்தன், சண்முகாதேவி ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பிரபாகர், பரம்பரை அறங்காவலர் ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.