பதிவு செய்த நாள்
28
பிப்
2021
11:02
சென்னை: மாசி மகத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோவில்களில், தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
உற்சவர்கள் கடலில் நீராடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.மாசிமகம், நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்கு போதிக்கிறது. இந்நாள், கடலாடும் நாள் அல்லது தீர்த்தமாடும் நாள் என, அழைக்கப்படுகிறது. அந்நாளில், இறை வடிவங்களை நீர்நிலைகளில் நீராட செய்வதோடு, பக்தர்களும் புனிதநீராடி மகிழ்கின்றனர். மாசிமகத்தை, தோஷம் நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது. இந்நாளில், புண்ணிய தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.மாசி மக தீர்த்தவாரி உற்சவம், மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றம் பவுர்ணமி நாளில் சில கோவில்களிலும் கொண்டாடி வருகின்றனர்.அதன்படி, மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது.நேற்று முன்தினம் சில கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இந்த வைபதத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசித்தனர். பலர் கடலில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்தனர்.