பதிவு செய்த நாள்
28
பிப்
2021
11:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், மாசி மக தேரோட்டம், சங்கு, சேகண்டி சத்தத்துடனும், கோவிந்தா கோஷத்துடன் நடந்தது.
கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமக தேர்த்திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, 25 ம் தேதி இரவு பெட்டதம்மன் மலையில் இருந்து, அம்மன் அரங்கநாயகி தாயாரை, நான்கு ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். 26 ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், தேருக்கு எழுந்தருளினார்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தேரின் மீது உள்ள சுவாமியை வழிபட்டனர். மாலை, 3:30 மணிக்கு தேர் முன்பு பூஜைகள் செய்தனர். 4:10 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது நூற்றுக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷம் போட்டு, நான்கு ரத வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். இந்த விழாவில் வேத வியாசர் ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, முன்னாள் எம்.பி., செல்வராஜ், முன்னாள் அமைச்சர் வேலுசாமி, கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், மிராசுதார்கள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு கழிப்பிட வசதிகளும், குடிநீர் வசதியும் செய்திருந்தது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், கோவை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தலைமையில், 300 க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலையில் இருந்து மாலை வரை பந்த சேவையும், இரவு குதிரை வாகனத்தில் பரி வேட்டை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.