பதிவு செய்த நாள்
28
பிப்
2021
11:02
திருப்பதி : திருமலையில், ஏப்ரல், 14ம் தேதி முதல், ஆர்ஜித சேவைகளை துவங்க உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருமலை அன்னமய்யபவனில் நேற்று காலை அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்ட நிறைவுக்கு பின் தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:திருமலையில், கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்ஜித சேவைகளை, தேவஸ்தானம் ஏப்ரல், 14ம் தேதி முதல் துவங்க முடிவு செய்துள்ளது. ஆர்ஜித சேவைகளுக்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள், கண்டிப்பாக, மூன்று நாட்களுக்கு முன், கோவிட் சோதனை செய்த சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் செயல்படுத்தி வருவது போல், திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலிலும் துலாபாரம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பல கோவில்களின் நிர்வாக பொறுப்பை, திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் கொண்டு வர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் பெறப்படும் நிதி, இக்கோவில்களின் பணிகளுக்கு செலவிடப்படும். திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கவும், அன்னதானத்திற்காகவும் பயன்படுத்தப்படும் நெய்யை பத்திரப்படுத்தி வைக்கும், 82.4 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கலன்களை, 180.4 மெட்ரிக் டன்னாக மாற்றப்பட உள்ளது. இதன் மூலம், நெய்யின் தரம், ஆறு நாட்கள் முதல், 14 நாட்களை வரை கெடாமல் பத்திரமாக வைக்கப்படும். விரைவில் மும்பை மற்றும் ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தானம் பூமி பூஜை நடத்த உள்ளது. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மார்க்கத்தில் நடந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.