பதிவு செய்த நாள்
01
மார்
2021
11:03
கடலுார் : மாசிமகத்தையொட்டி, கடலுார் துறைமுக உப்பனாற்றில் நடந்த தெப்பல் உற்சவத்தில் ஆயிரக் கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மகத்தையொட்டி, சிங்காரத்தோப்பு வெள்ளரி அம்மன், ஆற்றங்கரை தெரு ஏழை மாரியம்மன், சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சலங்கைக்கார தெரு நாகமுத்தாலம்மன், அக்கரைகோரி கண்ணுார் மாரியம்மன் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை சி்ங்காரத்தோப்பு கடற்கரையில் எழுந்தருள செய்யப்பட்டு, அங்கு தீர்த்தவாரி நடந்தது.
தொடர்ந்து, இரவு ஐந்து சாமிகளும் அலங்கரிக்கப் பட்டு, படகுகளில் எழுந்தருள செய்து, கடலுார் துறைமுக உப்பனாற்றில் தெப்பல் உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேப் போன்று, தைக்கால் தோணித்துறை கருப்பு முத்து மாரியம்மன் கோவில் உற்சவ மூர்த்தி பரவனாற்றில் அலங்கரிக்கப்பட்ட படகில் எழுந்தருளச் செய்து, தெப்ப உற்சவம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.