பதிவு செய்த நாள்
01
மார்
2021
11:03
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல் உற்சவத்தில், சுப்ரமணியர் சுவாமி தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.காலை பல்லக்கிலும், இரவு அலங்கரித்த வாகனங்களிலும் சுவாமிகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.முக்கிய நிகழ்வாக, நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அம்மன் குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. சண்முக சுப்ரமணியர் சுவாமி சமேத ராகபுஷ்ப பல்லக்கில் எட்டு மாட வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
அதிகாலை 3:45 மணியளவில், தெப்பத்தில் சுவாமி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கமிஷனர் அசோக்குமார் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர் .ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அம்மன் குளம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன், மாசிமக பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.