நாகர்கோவில்: இந்தியாவில் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பதால் தான் வெளிநாட்டினர் வியக்கும் அளவு நாம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளோம் என ஹிந்து சமய மாநாட்டில் கவர்னர் தமிழிசை பேசினார். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு ஹிந்து சேவா சங்கம் சார்பில் நடந்த 84வது சமய மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசியதாவது:ஆண்டுதோறும் இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்கு அன்னை தந்த வரமாகும். நான் ஒரு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆக வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இன்று எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆட்சி பணியை எனக்கு அன்னை தந்துள்ளார்.
கொரோனாவால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.அமெரிக்கா, கனடாவில் மூலைக்கு மூலை மருத்துவமனைகள் உள்ள நிலையில் இந்தியாவில் கோயில்கள் இருக்கின்றன. சிவன் கோயிலில் வில்வ இலை, விஷ்ணு கோயிலில் துளசி இலைகளால் பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. இதனால் தான் வெளிநாடுகள் வியக்கும் வகையில் கொரோனாவில் இருந்து நாம் மீண்டு வந்துள்ளோம்.கொரோனாவை எதிர்க்கும் மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவது உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்த்துள்ளது. நம் தடுப்பூசியை வாங்க 50 வெளிநாடுகள் காத்திருக்கிறது என்பது இந்தியா மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது என்றார்.