பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிப்.12 முதல் மாசித் திருவிழா நடந்து வருகிறது.
பிப்.,16ல் அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் சிறப்பு பூஜைக்கு பின் கோயில் நடப்பட்டது.பழநி பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். சிம்ம, வெள்ளி ரிஷப, யானை, தங்கக் குதிரை, வாகனங்களில் மாரியம்மன் வீதிவுலா தினமும் நடந்து வருகிறது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 4:30 மணிக்கு மார்கண்டேயன் கோயிலில் இருந்து பொட்டும், காரையும் கொண்டு வரப்பட்டது. மாரியம்மனின் உற்ஸவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாணம் நடைபெற்றது.
இன்று தேரோட்டம் : இன்று அதிகாலை அம்மன் கொலுவிருத்தல், காலையில் பாதிரி பிள்ளையார் கோயிலில் தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மேல் திருத்தேரில் சுவாமி எழுந்தருளலுக்கு பின் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற உள்ளது.இரவு வண்டிக்கால் பார்த்தல், நாளை (மார்ச் 4) அதிகாலை 3:00 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நடைபெறும். இரவு 10:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் உற்ஸவம் நிறைவு பெற உள்ளது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில் குமார் செய்கின்றனர்.