திருப்புவனம் : திருப்புவனம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்புவனத்தின் காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.பத்து நாட்களும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் விரதமிருந்து அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன் செலுத்துவார்கள். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற வைபவத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இரவு 8:50 மணிக்கு கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்ட பின் கொடியேற்றம் நடந்தது.நேர்த்திக்கடன் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கொடியேற்ற வைபவத்தை பாபு பட்டர், குமார் பட்டர், முருகன் பட்டர் நடத்தி வைத்தனர். மார்ச் 12ம்தேதி பொங்கல் வைபவம் நடைபெற உள்ளது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாரியம்மன் கோயில் பூஜாரிகள் சுரேஷ், ராஜ்குமார்,சேகர், ரஞ்சித் மற்றும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.