பதிவு செய்த நாள்
06
மார்
2021
12:03
நாமக்கல்:நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், ஓராண்டுக்கு பின், மீண்டும் தங்கத்தேர் இழுக்கும் வைபோகம் துவங்கியது.
கடந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும், கொரோனா தொற்று தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் மூடப்பட்டன. கடந்த அக்., முதல், பலவித கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டன. அதில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலிலும் திறக்கப்பட்டது.இக்கோவிலில், 2,000 ரூபாய் செலுத்தி பக்தர்களால் இழுக்கப்படும் தங்கத்தேர், கடந்தாண்டு மார்ச், 18 முதல் கொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்தது. கோவில்களில் வழக்கமான பூஜை மற்றும் விழாக்களை கொண்டாடலாம் என, அரசு அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு, 7:00 மணியளவில் தங்கத்தேர் இழுக்க, கட்டணம் செலுத்தியிருந்த பக்தர்களால், கோவில் வளாகத்தில் சுற்றி வரும் வகையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. தங்கத்தேரில் கோவில் உலா வந்த ஆஞ்சநேயரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.