பதிவு செய்த நாள்
19
மார்
2021
09:03
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 31ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
நேற்று முன் தினம் இரவு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன் அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் திருவிழா கொடியேற்றினர். கொடிகம்ப அடிப்பகுதியில் திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. ஏப்.2 வரை காலை மற்றும் இரவு சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர்.முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 24 இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி, 25ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 26 காலையில் கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, 27ல் பச்சை குதிரை ஓட்டம், 28ல் பங்குனி உத்திரம், 29ல் சூரசம்ஹார லீலை நடக்கிறது.மார்ச் 30 பட்டாபிஷேகம், 31ல் திருக்கல்யாணம், ஏப்.1 தேரோட்டம், 2ல் தீர்த்த உற்சஸவம் நடக்கிறது.