பதிவு செய்த நாள்
20
மார்
2021
03:03
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பக்தர்களின், சிவ நாமம் விண்ணை பிளக்க, பங்குனி மாத பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக, நேற்று துவங்கியது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், 10 நாட்கள் பெருவிழா, விடையாற்றி கலை விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை, 6:00 மணிக்கு, கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து காலை, 6:30 மணி முதல், 7:30 மணி வரை, கொடியேற்றம் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள், சிவ நாமத்தை உச்சரித்து தரிசித்தனர்.விழாவின், 2ம் நாளான இன்று, காலை, 8.30 மணிக்கு சூரிய பிரபையும், இரவு, 9:00 மணிக்கு சந்திர பிரபை காட்சியும் நடைபெறுகிறது.நாளை காலை, 6:00 மணிக்கு அதிகார நந்தி காட்சி; கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்விடை வாகனங்கள் உலா நடக்கிறது. தொடர்ந்து, திருஞானசம்பந்தர் முலைப்பால் விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அதிகார நந்தி சேவை, தேர், அறுபத்து மூவர் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும், போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். மாட வீதிகளை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. நான்கு வீதிகளிலும், 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. முக்கிய விழாக்களில், 50க்கும் மேற்பட்ட போலீசார், மாறுவேடங்களில் பக்தர்களோடு கலந்து, கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுஉள்ளன. நகை பறிப்பு, பிக் பாக்கெட் குற்றவாளிகளின் படங்கள், மாடவீதிகளை சுற்றி வைக்க, ஏற்பாடு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.